Saturday, April 22, 2006

அன்புள்ள மாலனுக்கு

 அன்பு திரு மாலன் அவர்களுக்கு
என்னை நீங்கள் நினைவில் கொள்ள நியாயம் இல்லை. ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களிடமிருந்து கடிதம் பெற்ற பாக்கியவான் நான். அப்போது நீங்கள் திசைகள் ஆரம்பித்த புதிது. நான் 23 வயது இளைஞன். திசைகளில் பங்குபெற வேண்டி என்னுடைய குறிப்பேட்டின் ஒரு பக்கத்தையும், எழுதிய (கிறுக்கிய?) கவிதையையும் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அந்தக் குறிப்பேட்டின் பக்கத்தில் "ஒரு துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப் போனான் என்று யாரும் யோசிக்கப் போவதில்லை" என்று குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் உங்கள் கைப்பட எழுதிய அந்த 2 பக்க கடிதத்தில், "துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப்போனான் என்று நான் யோசிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த கடிதம் கிடைத்த அன்றைய முன்தினம் இரவுதான் என் அப்பா மரித்திருந்தார். என் துக்கத்தையும் மீறி கடிதம் பெற்ற சந்தோஷம். அவ்வளவுதான். அவ்வபோது என்னுடைய வடிகாலுக்காக நான் கவிதையையும் கட்டுரையையும் கதையையும் எழுதிதானும் பதிப்புக்கு அனுப்புவதில்லை. சமீப காலத்தில் வலைப்பூக்களில் என்னுடைய படைப்புக்களையும் http://baksa.blogspot.com தமிழில் வெளிப்படுத்த உத்தேசித்து இணையத்தில் தேடியபோது என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! திசைகள் இணையத்தில்!! 2 ஆண்டுகளாக வந்துக்கொண்டிருக்கிறதா! நானும் பங்குபெற ஆசை. மீண்டும் திசைகளோடு தொடர்பு கொள்ள மிக்க ஆசையுடன்.
சந்துரு



No comments: