Sunday, June 25, 2006

மனிதர்கள்

கடந்த வாரம் ஒரு நாள் இரவு 10 மணி அளவில் என்னுடைய நண்பர் ஒருவர் மற்றொரு நண்பருடன் மின்சார ரயிலில் தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டியில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் வழக்கம் போல கதவோரத்தில் நின்றுக்கொண்டு பயணம் செய்திருக்கிறார். மனிதருக்கு சற்று இரத்த அழுத்தம் உண்டு. மின்சார வண்டி சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடைப்பட்டு பயணித்துக் கொண்டிருந்தபோது நண்பர் blank-out ஆகி ஓடும் வண்டியிலிருந்து விழுந்து விட்டிருக்கிறார். உடன் பயணம் செய்த நண்பர் செய்வதறியாது வண்டியின் alarm chain-ஐ இழுக்க முற்பட்டபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் அவரை தடுத்திருக்கின்றனர். “உங்களை யார் கதவருகில் நின்றுக் கொண்டு பயணம் செய்யச் சொன்னது?” என்று சத்தம்போட்டு கத்தி அவரை செயல்படாமல் தடுத்திருக்கின்றனர். அவர்கள் கூறிய மற்றொரு காரணம், அவர்கள் வீட்டுக்குச் செல்ல நேரமாகும் என்பது! என்னவொரு மனித நேயம் பாருங்கள்!

உடன் பயணம் செய்த நண்பர் செல்போன் மூலமாக மற்ற நண்பர்களுக்கு விஷயம் சொல்லியிருக்கிறாா. கிண்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் ஓடிப்போய் நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லிவிட்டு ரயில்பாதையில் வண்டி வந்த திசை நோக்கி ஓடியிருக்கிறார். அந்த இருட்டில் நண்பனை அவரால் காணமுடியவில்லை. இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் கீழே விழுந்தவருடைய செல்போனுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். கிண்டி ரயில் நிலைய அதிகாரி சைதாப்பேட்டை நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லி ஒரு பணியாளை இருப்புப்பாதையில் விழுந்தவரை தேடச்சொல்லியிருக்கிறார். இந்த பணியாள் கீழே விழுந்தவரையும் அருகே கிடந்த அவருடைய செல்போனில் அழைப்பு வருவதையும் பார்த்து attend செய்திருக்கிறார். ரத்தக்களறியாக இருந்தவரை எதிர் திசையில் சென்னை பார்க் செல்லும் மின்வண்டியில் ஏற்றி General Hospitalக்கு அனுப்பியிருக்கிறார். இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட மற்ற நண்பர்கள் அடிப்பட்டவரை அழைத்துப்போய் அட்மிட் செய்து அந்த இரவில் டாக்டர்கள் துரித கதியில் அடிப்பட்டவரை கவனித்து... நூற்றுக்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு... இப்போது நண்பர் சற்று தேறிவருகிறார். கீழே விழுந்தவரை ஆஸ்பிடலில் சென்று அட்மிட் செய்ய ஆன நேரம் ஒரு மணி நேரம் தான். ஓடும் ரயிலில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவர் எனக்குத் தெரிந்து இவர் மட்டும்தான்.

விஷயம் இதுவல்ல. மனிதனுக்கே மனித உயிரின் மதிப்பு தெரியாமலிருக்கிறதே என்கிற ஆதங்கம் தான் இதை நான் எழுத காரணம். தனக்கு நேராவிடில் நல்லது என்கிற மெஷினாகிவிட்ட மனிதனின் இந்த மனோபாவம் இனிமேலா மாறப்போகிறது? இந்த அழகில் நாம் ஈழத்தையும் ஈராக்கையும் பார்த்து அந்த மனிதர்களைப்பற்றி விமரிசனம் செய்து வருகிறோம்.
நாம் அனைவரும் தாலிபானை விட எந்த விதத்தில் உசத்தி?

Monday, June 05, 2006

நிலாம்பூர் பங்களா

எல்லா அரசாங்க அலுவலகங்களில் இருப்பது போல இரயில்வேயிலும் ஆய்வாளர்கள் என்று பாவப்பட்ட பிரிவு ஒன்று இருக்கிறது. அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடைப்பட்ட அவர்களிடம் யாரும் எத்தகைய கேள்விகளையும் கேட்கலாம். அனைத்துக்கும் அவர்கள் பதிலிருத்தே தான் ஆகவேண்டும். அவர்களிடம் அதிகாரிகள் கேட்கும் கேள்விகள் இருக்கிறதே... அதைச் சுலபத்தில் சொல்ல முடியாது. அந்த கேள்விகள் எந்த பாடப்பிரிவிலும் இருக்கலாம். எல்லாம் அந்த ஆய்வாளர்களுடைய தினசரி ராசிபலனைப் பொருத்தது.

“எத்தியோப்பியாவில் இப்போது என்ன நேரம்?”
“தெரியவில்லை ஐயா. நான் விசாரித்துச் சொல்கிறேன்”
“பிரயோஜனம் அற்ற பிறவி. இதுகூட தெரியாமல் நீ என்ன ஆய்வாளர்? சீக்கிரம் விசாரித்துக் கொண்டு வந்து சொல்!”
“அப்படியே ஐயா”

அலைந்து திரிந்து தெரிந்துக் கொண்டு வந்து,
“ஐயா, தற்போது சரியாக விடியற்காலை மணி 04:15”
“அப்படியா... என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மாமா பையன் தற்போது தூங்கிக்கொண்டு இருப்பான். மூன்று மணிநேரம் கழித்து தொலைபேசவேண்டும். எனக்கு ஞாபகம் படுத்து”

அரசாங்க அலுவலகங்களின் முதுகெலும்பான இவர்கள் முதுகொடிந்துப் போய் இருப்பது தான் பரிதாபம். அதுவும் இரயில்வேயில் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆய்வாளர்கள் நிலைமை இருக்கிறதே இன்னமும் மோசம். தங்கும் இடமின்றி, நேரத்தில் உணவு கிடைக்காமல் அவர்கள் படும் அவஸ்தை இருக்கிறதே அதை எழுத்தில் கொண்டு அடங்க மாட்டாது. ஃப்ளாட்பாரத்தில் படுத்து, கையேந்தி பவனில் சாப்பிட்டு... நீங்கள் அடுத்தமுறை இரயிலில் பயணம் செய்யும்போது ஃப்ளாட்பாரத்தில் படுத்துக்கொண்டு சாப்பாட்டுக்காக கையேந்திபவனை தேடித் திரிந்துக் கொண்டு இருக்கும் யாரையேனும் சந்திக்க நேர்ந்தால் யாரோ பைத்தியக்காரன் என்று தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம். அவர் ஒரு இரயில்வே ஆய்வாளராகக்கூட இருக்கக்கூடும்.

இத்தனை இருந்தும் கூட,
“என்ன சார் கொஞ்ச நாளாக உங்களைக்காணோம்?”
“நான் ‘லைன்’ல போய் இருந்தேன்” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஏதோ சார்லஸ்-கமீலா கல்யாண விருந்துக்குப் போய்வந்தது போல சொல்வார்கள்.

அத்தகைய பாவப்பட்ட பிரிவில் தான் நான் இருக்கிறேன். நான் இருப்பது “சரக்கு இயக்ககத் தகவல் அமைப்பு” என்று சிக்கலான நாமகிரணம் சூட்டப்பட்ட ஒரு பிரிவில். இந்திய இரயில்வேயில் முக்கியமான சரக்குகூடங்களுக்கு intranet மூலம் ஒரு தகவல் இணைப்பு கொடுத்து, இந்தியா பூராவும் சரக்கு வண்டி, எங்கிருந்து எங்கு சென்றாலும் மேற்பார்வை செய்ய வசதியாக, கால்குலேட்டரைக்கூட பார்க்காதவர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டரை கொடுத்து அவர்கள் உயிரை எடுத்துக்கொண்டு.... இது ஒரு பெரிய மஹாத்மியம். இந்த விவரங்கள் எல்லாம் சொல்லி மாளாது. விட்டு விடுங்கள்....

இந்த “சரக்கு இயக்ககத் தகவல் அமைப்பு” ஆரம்பித்த காலத்தில் இருந்து ஷோரனூர் என்னும் கேரளாவைச் சேர்ந்த ஊரில் கம்ப்யூட்டர் இணைப்பு வேலைசெய்யவில்லை. வழக்கம் போல என்னைச் சென்று கண்டு வந்து அறிக்கை சமர்பிக்குமாறு பணித்திருந்தார்கள். ஷோரனூர் சென்று வருவது ஏறத்தாழ ஷேத்ராடனம் செல்வதற்கு சமம். வரும்வரையில் நிச்சயமில்லை. அதுவும் இல்லாமல், பழக்கமில்லாத அந்த கொட்டை அரிசியை ஜீரணம் செய்ய நான்கு மலைகளை ஏறி இறங்க வேண்டும்... வேறு வழியில்லை. போய்த்தான் ஆகவேண்டும். சபரிமலைபோகும் ரேஞ்சுக்கு இருமுடி கட்டாதகுறையாக மூட்டைமுடிச்சுடன் சாமியே சரணம் ஐயப்பா என்று மங்களூருக்கு வண்டி ஏறினேன். நாளை சாப்பாடு தூக்கம் நிச்சமில்லை.

பாலக்காட்டில் வாங்கிய வாயில் வைக்கமுடியாத தேனீருடன் (நன்றாக டீ போடும் நாயர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் போலும்!) காலை தினசரி கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது என் முதுகில் ‘பளார்’ என்று யாரோ அடிக்க திரும்பிப் பார்த்தேன்.

“டேய், என்ன தெரியல” என்று கேட்டபடி ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் கல்லூரியில் படித்த சீனுவாசன் என்ற சீனு.
“ஏன் தெரியாம? எதிர்லதான நிக்கற” என்றேன். “எப்படிடா இருக்க. உன்ன பாத்து ஒரு பத்து வருஷம் இருக்குமா?”
“மேலேயே இருக்கும். நீ எங்கடா இருக்க? என்ன வேலை செய்யற?”
“சென்னையில இருக்கேன். ரெயில்வேயில வேலை. நீ எங்க இருக்க? என்ன பண்ற?”
“நான் க்ராஸிம் ரயான்ஸ்ல புரொடக்ஷன் மேனேஜரா இருக்கேன். மாவூர் தெரியுமா உனக்கு? காலிகட் பக்கத்துல இருக்க. எங்க புரொடக்ஷன் யூனிட் அங்கதான் இருக்கு. பக்கத்துல வீடு. டெல்லியில ஒரு வொர்க் ஷாப். 15 நாளட உயிரை எடுத்தானுங்க. அப்படியே சென்னையில ஒரு வேலை. அதையும் முடிச்சிட்டு 20 நாளுக்கப்புறம் இப்பத்தான் வீட்டுக்குப்போறேன். அது சரி. நீ எங்கடா?” என்றான் சீனு.
நான் என் கதையை சொன்னேன். ஷோரனூர்ல என் வேலை இன்னிக்கும்அ நாளைக்கும் மட்டும். முடிச்சிட்டு நாளை ராத்திரி சென்னை திரும்ப ஏதாவது ஒரு வண்டி.”
“எங்கடா தங்கப் போற?” என்னைக் கேட்டிருக்கக்கூடாத ஒரு கேள்வி. “உனக்கென்னடா, ரெயில்வேகாரன். மொத்த ஏரியாவும் உன்னோடது. ஏதாவது கெஸ்ட் ஹவுஸ் இருக்கும்” என்றான் அவனாகவே.
“இல்லேடா” என்றேன் அழமாட்டாகுறையாக. திக்கித்திணறி, அவமானம் பிடுங்க நான் வெளியூரில் ‘கேர்-ஆஃப்-ப்ளாட்பாரம்’ என்பதை புரிய வைத்தேன்.
“அதனால் என்னடா” என்றான் என் நண்பன் பெருந்தன்மையாக. “பேசாமல் என் வீட்டுக்கு வந்துடு. நான் என்னோட ஒய்ஃப், ரெண்டு பசங்க மட்டும்தான். யாருக்கும் ஒன்னும் தொந்தரவு இல்லை”
இருபது நாள் கழித்து தன்னோட மனைவி மக்களைப் காண ஆவலுடன் வீட்டுக்குச் செல்லும் நண்பனோடு ஒட்டிக்கொண்டு போகும் அளவுக்கு இங்கிதம் தெரியாதவன் அல்ல நான். ஆகவே அவனோடு வருவதற்கு நாசூக்காக மறுத்தேன். “பரவாயில்லைடா. நான் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்” என்றேன்.
அவன் என்னை விடுவதாக இல்லை. தன்னுடைய கம்பெனி கெஸ்ட் அவுஸ் ஷோரனூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நிலாம்பூர் செல்லும் சாலையில் இருப்பதாகவும் எல்லா வசதிகளும் அங்கு உண்டு என்றும், நான் மறுப்பு சொல்லாமல் அங்கு தங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். நானும் சரியென்றேன்.

ஷோரனூரில் அவனை அழைத்துப்போக கம்பெனி கார் வந்திருந்தது. அதில் என்னை ஏறிக்கொள்ளச் சொன்னான். ‘என்னைப் பார்த்து காப்பி அடித்து பாஸ் பண்ணிய சீனு புரொடக்ஷன் மேனேஜர். கல்லூரியில் முதல் ஆளாகப் பாஸ் செய்த நான் வெறும் புண்ணாக்கு!’ எனக்கு அடிவயிற்றில் கொஞ்சம் பொறாமைத் தீ புகைந்தது.

“நான் வீட்டுக்குப்போற வழியிலதான் உன்கிட்ட சொன்ன கெஸ்ட் ஹவுஸ். நாங்கள் அதை நிலாம்பூர் பங்களா என்று சொல்வோம். உன்னை அங்க இறக்கிவிட்டுட்டுப் போறேன். நான் வீட்ல இறங்கிட்டபிறகு உனக்கு கார் அனுப்பறேன். நீ உன் வேலை எல்லாம் பாத்துக்கிட்டு ராத்திரி வெஸ்ட் ஹவுஸ்ல இறங்கிட்டு காரை அனுப்பினால் போதும். நாளைக்கு காலைல நான் ஆபீஸ் போறப்ப மறுபடியும் உன்னை பிக்-அப் பண்ணிக்கிறேன்.”

எனக்காக இவ்வளவு செய்பவன் மேல் பொறாமை பட்டதற்காக எனக்குள் வருந்தினேன். “ஸாரிடா. என்னால் உனக்குத்தான் எத்தனை தொந்திரவு” என்றேன் மனசார.
“என்னடா பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு. என்னோட வீட்டுக்கு வந்து தங்காதது தான் எனக்கு கொஞ்சம் குறை” என்றவன், இந்த கெஸ்ட் ஹவுஸ்ல பகல்லதான் ஒரு சமையல்காரன் கம் அட்டென்ண்ட் இருப்பான். ராத்திரி யாரும் இருக்க மாட்டாங்க. நீ கதவை நல்லா தாப்பாள் போட்டுகிட்டு படுத்துக்கோ. ஒன்னும் பயமில்ல. நீ தனியா படுக்க பயப்படுவியா, என்ன?”
“சீச்சீ. இந்த வயசுல எனக்கு என்னடா பயம்?” என்றேன்.
கெஸ்ட் ஹவுஸ் ஒரு ‘ட’ வடிவ சாலை திருப்பத்தில் மூலையில் இருந்தது. கெஸ்ட்ஹவுஸ்ஸின் கிழக்கிலும் வடக்கிலும் சாலை. சென்னையின் பரபரப்பான சாலைகளைப்பார்த்துவிட்டு, இந்த வெறிச்சோடிய சாலையைப் பார்க்கும்போது விநோதமாக இருந்தது.
“இந்த வழியாக பஸ் போக்குவரத்து ஏதும் இல்லையாடா?”
“பஸ்ஸெல்லாம் பை-பாஸ் ரோடு வழியாக போயிடும். அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களுக்குப் போகும் மாட்டுவண்டிகள் மட்டும்தான் இந்த வழியாகப் போகும். பொதுவாகவே கேரளாவில் இந்த பக்கத்தில் பஸ் போக்குவரத்து கொஞ்சம் கம்மிதான்!”
கெஸ்ட் ஹவுஸ் மிகப் பெரியது எல்லாம் இல்லை. பங்களா எ்னற வறையறைக்குள் வராமல், சுமாராக ஒரு டபுள்-பெட் ரூம் அளவுதான் இருந்தது. ஆனால் அந்த வீட்டை சுற்றியிருந்த காம்பெளண்ட் சுவர் இந்த சிறிய கட்டிடத்தை சற்று பிரம்மாண்டமாக காட்டியது. காம்பெளண்ட் கேட்டிலிருந்து சுமார் 30 அடி உள்வாங்கி இருந்தது கெஸ்ட் ஹவுஸ். சற்று பழைய கட்டிடம் ஆனாலும் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்டு புதிதாகக் காட்சி அளித்தது. காம்பெளண்ட்டுக்குள் நாலைந்து மரங்கள். சுகமான காற்று. ரம்யமான மணத்தோடு அடர்ந்த பூச்செடடிகள் வேறு. எனக்கு அந்த வீட்டிலேலே தங்கிவிட மனம் ஏங்கியது.

ராமு நாயர் என்கிற சமையல்காரன் கம் அட்டெனெண்ட் சுமார் அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் சீனு என்னைச் சுட்டிக்காட்டி மலையாளத்தில் ஏதோ கூற, அந்த ராமு நாயர் எனக்கு பெரிய வணக்கம் செய்தார். சீனு அவருக்கு அடுக்கடுக்காக மலையாளத்தில் உத்தரவு பிறப்பித்துவிட்டு என்னிடம், “ராமு, உன்னை நல்லா பாத்துப்பார். ஓரே கஷ்டம் அவருக்கு மலையாளம் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ஆணால் நீ சாப்பிட தங்க எல்லாவற்றுக்கும் நான் சொல்லியிருக்கேன். நீ கவலைப்படாதே. நீ பேசற தமிழை அவரால புரிஞ்சிக்க முடியும்” மீண்டும் அந்த பெரியவரிடம் ‘என்னைப் பாத்துக்கோ’ என்பது போல மலையாளத்தில் ஏதோ சொல்லிவிட்டு, “டேய், நான் கிளம்பறேன். நாளைக்கு காலையில் உன்னை வந்து பாக்கறேன்” என்று கிளம்பிவிட்டான்.

ராமு நாயர் காட்டிய ரூம் மிகவும் நன்றாக இருந்தது. இரட்டை கட்டில், பாத் அட்டாச்சுடு. ஒரு டிவி. மேஜை நாற்காலி, சோபா செட். ஜன்னல் வழியாக கிழக்குப்புற சாலை தெரிந்தது. முன்பக்க ஜன்னல் வழியாக காம்பெளண்ட் கேட் தெரிந்தது. அறை நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்தது. நான் குளித்து முடித்து வரும்போது டேபிளில் என்னுடைய மதிய உணவு தயாராக இருந்தது. ராமு நாயர் நல்ல சமையல்காரர்!. இதுபோல உணவும் இருப்பிடமும் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் போய் எத்தனை நாட்களானாலும் வேலை செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
நான் சாப்பிட்டு முடிக்கவும் சீனு அனுப்பிய கார் வரவும் சரியாக இருந்தது. ஷோரனூர் ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் இருந்த கம்ப்யூட்டர் ஏறத்தாழ சிதிலமாக இருந்தது. ஒரு காட்சிப் பொருள், அவ்வளவு தான். அங்கிருந்த ஒரு பணியாள், ‘சாரே, இந்த டிவியில் ஏசியாநெட் வருதில்லா!’ என்றதும் எனக்கு நிலைமை புரிந்தது. அவர்களுக்கு, ‘இதில், ஏசியாநெட், சூர்யா டிவி போன்ற இன்னபிற டிவிககளும் இன்டர்நெட் போன்றவைகளும் வராது’ என்று கூறி சரக்குப் போக்குவரத்தின் மென்பொருள் அமைப்பை விளக்குவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிவிட்டது. போதாதகுறைக்கு அவர்களுக்கு கணிப்பொறியின் அடிப்படைகளை புரிய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. இதற்குபதில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிடலாம். ‘இது தேறாது’ என்ற முடிவுக்கு வரும்போது ஏறத்தாழ மாலை ஆறுமணி ஆகிவிட்டிருந்தது. நான் கிளம்பிவிட்டேன். ராமுநாயர் கிளம்பும்முன்னர் நான் கெஸ்ட் ஹவுஸ் சாவி வாங்கிக் கொள்ள வேண்டும்.

நான் கெஸ்ட் ஹவுஸை அடையும்போது ராமு நாயர் புறப்பட தயாராக இருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. சாவியை கொடுத்துவிட்டு இரவு சாப்பாடு எனது ரூமில் இருப்பதாகவும், தான் மறுநாள் காலை 7 மணிக்கு வந்துவிடுவதாகவும் மலையாளத்தில் கூறிவிட்டு புறப்பட்டார்.

கதவைச் சாத்திக்கொண்டு சூப்பராக ஒரு குளியல் போட்டேன். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது சென்னையில் ஆகிற காரியமா? குளித்து முடித்ததும் கொஞ்சம் காபி சாப்பிட்டால் தேவலை என்று தோன்றியது. வரும் வழியில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாதது ஞாபகம் வரவே, அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். கொண்டு வந்திருந்த ஃபியதோர் தொஸ்தயவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளவே நேரத்தைப் பார்த்தால் இரவு ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. நாயரின் சப்பாத்தியும் டாலும் அற்புதமாக இருந்தது. கூட ஏதோ ஒரு கேரளத்துப் பச்சடி. போகும்போது நாயருக்கு ஏதாவது டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஜன்னல் வழியாக கெஸ்ட் ஹவுஸ் கேட் ஒரு ஸில்அவுட் போல தெரிந்தது. சாலையில் தூரத்தில் துடைக்காத ட்யூப்லைட் மங்கலாக ஒளிர்ந்தது. வெளியிலிருந்து வந்த சில்லென்ற காற்று கொஞ்சம் நறுமணத்துடன் அற்புதமாக இருந்தது. கொஞ்ச நேரம் ரூமிலேயே நடந்தேன். பிறகு படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டே எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. தூக்க கலக்கத்தில் திடீரென்ற ‘ஜல்...ஜல்...ஜல்...’ என்ற சப்தம் சற்று துரமாக பின்னர் சற்று நெருங்கி மீண்டும் தேய்ந்து போனதை கேட்டதும் அந்த குளிரிலும் சற்று வியர்த்தது. பெளர்ணமி முடிந்து மூன்று நாட்கள் கடந்திருந்தும் நிலா வெளிச்சம் வெளியே மெல்லிய நீல நிறமாய் படர்ந்திருந்தது. ஜன்னல் வெளியே எவ்வளவுதான் உற்றுப் பார்த்தாலும் ஏதும் தெரியாததால் சற்று நேரத்தில் அப்படியே மீண்டும் தூங்கிப்போனேன். சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் அதே ‘ஜல்...ஜல்...ஜல்...’ என்ற சப்தம். நான் முழுவதுமாக விழித்துக்கொண்டேன். நான் படித்த பார்த்த திகில் கதைகள் அந்த சமயத்திலா எனக்கு நினைவுக்கு வரவேண்டும்? இருப்பினும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கதவை திறந்துக் கெர்ணடு காம்ப்பெளண்ட் கேட்டைப் பார்த்தேன். கேட் சாத்தியிருந்தது. பக்கத்தில் யாரோ நிற்பது போல இருக்கவே, நான் இருந்த இடத்தில் இருந்து குரல் கொடுத்தேன்.
“யாருப்பா அது?”
“சாரே, ஞான் பாலனாக்கும் இவிட வாட்ச்மேன் சாரே” என்றது அந்த உருவம்.
“ராத்திரியில் யாரும் கிடையாதுன்னு சொன்னாங்களே” என்றேன் சந்தேகத்துடன்.
“ஞான் லீவில் போயிருந்தது சாரே. இன்ன ஞான் திரிக்குன்னு யாரும் அறியத்தில்லா. அதனாயிட்டு அங்கன பறைஞ்சுபோயி”
நான் கேட்டுக்கொண்டே அந்த வாட்ச்மேனை ஏறத்தாழ நெருங்கினேன். மரங்கள் அடர்ந்திருந்ததால், நிலா வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்தது. இருந்த மிகக்குறைவான ஒளியில் அவனை முழுவதுமாக பார்க்க இயலாவிடினும் அவனை கணிக்க முடிந்தது. அந்த வாட்ச்மேன் சற்று சன்னமாக, நாம் பத்திரிக்கையில் பார்த்த வீரப்பனைப்போல, ஆனால் மீசை சன்னமாக வைத்துக்கொண்டு, மேலே காக்கி யூனிஃபார்ம் சட்டையுடனும், கீழே இறக்கி கட்டிய லுங்கியுடனும், கையில் ஒரு கைத்தடி வைத்துக்கொண்டு இருந்தான். அவன் குரல் எண்ணெய்விடாத கதவைப்போல சற்று கிரீச்சென்றிருந்தது.
எனக்கு தூக்கம் முழுவதுமாக போய்விட்ட காரணத்தால், அவனிடம் பேச்சு கொடுக்க நினைத்தேன்.
“ஏம்ப்பா, உனக்கு தமிழ் வருமா?”
வரும் சாரே, ஞான் கல்யாணம் கழிச்சது ஒரு தமிழ் பொண்ணுதான் சாரே”
“அப்படியா. அது சரி, அது என்னப்பா ‘ஜல்...ஜல்...ஜல்...’ ன்னு ஒரு சப்தம்” என்றேன் என் குரலில் பயம் தெரிந்துவிடாதபடிக்கு.
“ஓ! அதுவா சாரே, இங்கன மாட்டுவண்டி போகும் சாரே. நம்ப கெஸ்ட் ஹவுஸ் கார்னரில் இருக்குதில்லா. அதை சுத்தி போகுன்னு சாரே”
உண்மைதான். கெஸ்ட் ஹவுஸை சுற்றிப் போகும் சாலையில் மாட்டுவண்டி போகும்போது தூரத்தில் வரும் வண்டி சலங்கை ஒலி சன்னமாகவும்ஈ கெஸ்ட் ஹவுஸை நெருங்க நெருங்க சத்ததமாகவும், மீண்டும் விலகிப்போகும்போது அந்த சத்தம் தேய்ந்தும் போகிறது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு மாட்டுவண்டி சலங்க சத்ததுடன் கடந்துப் போனதைப் பார்த்ததும், அனாவசியமாக பயந்தது எனக்கு சற்று வெட்கமாகக்கூட இருந்தது. சட்டென்று பேச்சை மாற்றினேன்.
“என்னப்பா நீ கட்டிக்கிட்டது தமிழ்ப் பெண்ணா. வெரிகுட். எத்தனை பசங்க உனக்கு?”
“எனக்கு பசங்க இல்ல சாரே”
“சாரிப்பா. நான் கேட்டிருக்கக்கூடாது.”
“அதனால என்ன சாரே. எ்ன பொண்டாட்டி என்கூட இல்லல சாரே.” சொல்லும்போதே அவனுடைய ‘கிரீச்’ குரல் மேலும் உடைந்து, ஒரு வினோதமான அழுகையுடன், கமலஹாசன் ‘நாயகன்’ படத்தில் அழுவாரே, அதுபோல, எனக்கு ஏண்டா அவனிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது. இருப்பினும் இரு மனிதனுக்கு ஆறுதல் தருவதில் தப்பில்லை என்ற நினைப்பில்,
“ஏம்ப்பா, என்னாச்சு? அவங்க உடம்புக்கு என்ன? உனக்கு என்னிடம் சொல்வதில் ஆறுதல் கிடைக்குமுன்னா சொல்லலாம்”.
“சாரே. நான் இந்த பங்களாவுல நைட் டூட்டி பாக்கச்சொல்ல, வேறு ஒருத்தன் என் வீட்ல நைட் டூட்டி பாத்துட்டான் சாரே. சரிதான் போடின்னு தொரத்திவுட்டுட்டேன். இப்ப அவனும் தொரத்திட்டான்போல சாரே. அவளுக்கு நல்லா வேணும் சாரே. ஞான் அவளை மகாராணியாயிட்டு பாத்துக்கிட்டேன் சாரே. என் கிட்டயே துரோகம் பண்ணிட்டா சாரே” என்று மறுபடியும் அந்த ஊளையிடும் அழுகையைத் தொடர்ந்தான்.
எனக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இருந்தாலும் அந்த ஊளை அழுகை அந்த அமானுஷ்யமான மெளனத்தில் சற்று கலவரப்படுத்தியது.
“போகட்டும் பாலன். அழுவாதிங்க. இப்பத்தான் அந்த ஆள் உன் பொண்டாட்டியை விட்டுட்டு போயிட்டானே. மறுபடியும் அவளை சேத்துக்கக்கூடாதா? அந்தப் பொண்ணு உன்னைப் பாக்க வராளா?”
“அது ஏன் சாரே கேக்கற. தினம் ராத்திரி வந்து என்ன சேத்துக்கக்சொல்லி ஓரே தொந்தரவு பன்றா சாரே. நான்தான் கோபத்துல அவளை சேத்துக்கக்கூடாதுன்னு இருக்கேன். இதோ இப்பக்கூட வந்திருக்கா நோக்கு சாரே” என்று சொல்லி எனக்கு பின்னால் இருந்த புதரைக் காட்டினான். அப்போதுதான் நான் அங்கே ஒரு பெண் இருந்ததை பார்த்தேன். அதுவரை நானும் வாட்ச்மேன் மட்டும்தான் இருக்கிறோம் என்று நினைத்தக்கொண்டிருந்தபோது இந்தப் பெண்ணைப் பார்த்ததும் சற்ற சிலிர்த்தது.

வாட்ச்மேன் அவளைக் சுட்டிக்காட்டியதும், அதுவரையில் மெளனமாக இருந்த இந்தப் பெண்ணிடமிருந்து ஒரு கேவல் வெடித்து அழுகையாக மாறியது. இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அழுகை, அந்த நேரத்தில் இந்தப் பெண்ணிடமிருந்து... எனக்கு எரிச்சலாகக்கூட இருந்தது. கண்ணிறைந்த கணவனை விட்டுவிட்டு சரசமாடும் இது போன்ற பெண்களுக்கு எப்போதுதான் அறிவு வரும்? வாழ்க்கையின் அற்புதங்களை மறந்து காமத்திற்கு மட்டுமே இடம் கொடுக்கும் இது போன்ற பெண்களை வெட்டிப் போட்டால்கூட தப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

அவள் அழ ஆரம்பிக்கவே, வாட்ச்மேன் பாலனின் குரல் சற்று அதிகமாகி அவளை அதட்ட அதற்கு அவள் ஏதோ பதில் சொல்ல, நான் ஒரு குடும்ப பிணக்கில் நடுவே இருப்பது சரியில்லை என்று அங்கிருந்து நகர்ந்தேன். மீண்டும் அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுத்தது தான் தெரியும். அடித்துப்போட்டாதுபோல தூக்கம்.
கதவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டுத்தான் கண்விழித்தேன். காலை நன்றாக விடிந்துவிட்டிருந்தது. ராமு நாயர் காலை வேலைக்கு வந்துவிட்டார். அவரிடம் அசந்துவிட்டதாக சற்று வெட்கத்துடன் கூறி கதவைத்திறந்தேன். கேட் அருகில் என்னை அறியாமல் பார்வை போனது. வாட்ச்மேன் பாலன் டூட்டி முடிந்து போய்விட்டான் போல.
ராமு நாயர் சமையல் வேலையில் ஈடுபட, நான் குளித்து ஆயத்தமானேன். காலை சிற்றுண்டி அருந்தி, என்னுடைய உடமைகளை எல்லாம் தயார் செய்துக்கொண்ட சற்று நேரத்திற்கெல்லாம், சீனுவின் வண்டி வரும் சத்தம் கேட்டது.
“என்னடா, எல்லாம் செளகரியமாக இருந்ததா? என் மனைவியும் பிள்ளைகளும்தான் உன்னை கெஸ்ட் ஹவுஸில் விட்டுவிட்டு வந்ததுக்கு என்னை கோபிச்சிகிட்டாங்க.” என்றான்.
மற்றொருமுறை அவனுடைய வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ராமு நாயருக்கு என்னுடைய நன்றியையும் அன்பளிப்பாக கொஞ்சம் பணமும் கொடுத்தேன். எவ்வளவு வற்புறுத்தியும் ராமுநாயர் பணம் வாங்க மறுத்துவிட்டார்.
காரில் ஷோரனூர் ஸ்டேஷன் வரும்போது,
“என்னடா, நல்லா தூங்கினியா? புது இடம். தனியாவேறு இருந்த. சரியா தூங்கித்தான் இருக்க முடியாது” என்றான் சீனு.
“நான் எங்கடா தனியா இருந்தேன். பங்களா வாட்ச்மேன் பாலன்தான் நேத்து டூட்டில சேந்துட்டானே. அவனோடயும் அவன் பொண்டாட்டியோடவும் அவன் குடும்பத் தகறாறை பஞ்சாயத்து பண்றத்துக்கே எனக்கு நேரம் சரியா இருந்தது” என்றேன்.
“என்னது பாலனைப் பாத்தியா?” என்றான் சீனு. “அவன் பொண்டாட்டியை வேற பாத்தியா?”
சீனு ஏன் இப்படி பேய் அறைந்தவன் போல ஆணான் என்று புரியாமல், “ஆமாடா. பொண்டாட்டியை தள்வி வைச்சுட்டானாம். அவ வந்து அவனை சேத்துக்கச்சொல்லி ஒரே அழுகை. அதை ஏண்டா கேக்கற” என்றேன் அலுப்புடன்.

“பாலன் பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு அவளை கொன்னுட்டு அவனும் தூக்கு மாட்டி செத்துப்போய் இன்னியோட ரெண்டு வருஷம் ஆச்சு!” என்றான் சீனு வியப்புடனும், பயத்துடனும்.

நான் மூர்ச்சையானேன்!


***