Monday, August 17, 2009

தீர்க்கதரிசி கமல்!


கமலஹாசனுடைய படங்கள் அனைத்தும் வரும் முன் உரைப்பவைகளாகத்தான் இருந்திருக்கின்றன. நம்முடைய சிற்ற்றிவுக்குத்தான் சரியாக புலப்படவில்லை.


1978ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள். அதில் அவர் பெண்களை கொலைச் செய்யும் சைக்கோ கேரக்டரில் நடித்திருப்பார். 1979ல் அது போலவே பெண்களை கொலைச் செய்துக் கொண்டு எல்லோரையும் அளற வைத்த சைக்கோ ராமன் என்பவன் பிடிபட்டான்.


1988ல் சத்யா என்ற படத்தில் கமல் வேலையில்லாத படித்த பட்டதாரி வேடத்தில் நடித்திருப்பார். நண்பர்களுடன் வெளியில் சுற்றித் திரியும் சத்யா சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களைக் கண் கொடுத்துப் பார்த்து கோபம் கொள்கின்றான். நல்லவனாக சத்யாவைத் தனது பக்கம் இருக்குமாறு கூறிக்கொள்ளும் ஒரு தீயவனால் சத்யா கைக்கூலியாக்கப்படுகின்றான். தனக்கு இந்நிலமையினை ஏற்படுத்தியவர்களைப் பழி வாங்குகின்றான். அதுபோலவே 1989ல் படித்த பட்டதாரிகள் நக்ஸலைட்டுகளாக உருமாறியதும் நடந்த்து.


1992ல் கமலுடைய தேவர்மகன் படத்தில் ஜாதிய சண்டையை பிரதானமாக்கி கதை சொல்லியிருப்பார். 1993ல் தென்மாவட்டங்களில் தொடர்ந்த சாதிக் கலவரங்களுக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் அதை முன்கூட்டியே கமல் சொல்லியிருந்த்தை யாரும் மறுக்கமுடியாது. 


1994ல் மகாநதி படத்தில் ஒரு ஃபைனாண்ஸ் கம்பெனி மூலம் சிறைக்குப்போன கமல் எப்படி ஃபைனாண்ஸ் கம்பெனிகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் கூறியிருப்பார். 1996ல் எல்லா டிவி சேனல்களும் மக்களை ஏமாற்றிய பைனாண்ஸ் கம்பெனிகளை பற்றியும் போலீஸ் ஸடேஷனுக்கு படையெடுத்த மக்களையும் தினம் தினம் பட்டியலிட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.


2000 ஆண்டு வெளியான ஹேராம் படத்தில் பழைய மதக்கலவரங்களை தொட்டுகாட்டியிருப்பார். 2002ல் இந்து முஸ்லிம் கலவரம் நடந்த்தை நாடே அறியும்.


2003ல் அன்பே சிவம் படத்தில் சுனாமி என்னும் வார்த்தையை முதன்முறையாக உபயோகப்படுத்தி இருப்பார். அதுவரை தமிழன் யாருக்கும் தெரியாத வார்த்தை அது. 2004ல் அந்த சுனாமி என்ற வார்த்தையே தமிழன் யாருக்கும் மறக்கமுடியாத வார்த்தையாக மாறிப்போனது.


2006ல் வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் தொடர் கொலைகளைப்பற்றி சொல்லியிருப்பார். ,இதே ஆண்டு கடைசியில் டெல்லியை அடுத்த நொய்டாவில் தோண்டத்தோண்ட பிணமாக கிடைத்த அதிர்ச்சியில் மக்கள் உறைந்து போனார்கள்.


2008ல் தசாவதாரம் படத்தில் மக்களை தாக்கும் மரண வைரஸ் அமெரிக்காவில் இருந்து வருவதாக காட்டியிருப்பார். 2009ல் நாமெல்லோரும் செய்வதறியாது திகைத்திருக்கும் ஸ்வைன் ஃப்ளு, அதுவும் அமெரிக்காவில் இருந்துதான் வந்த்து எனபது எல்லோருக்கும் தெரிந்தது தானே!


இப்போது என்னுடைய கவலைகள் எல்லாம் கமலின் அடுத்து வரப்போகும் படங்களைப் ப்ற்றிதான்!


ஒன்னுமே புரியலை உலகத்திலே!

செய்தி 1
ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு ஃப்ளு மாதிரியான காய்ச்சலாம். மாமனார் அமிதாப் பச்சன் மிகவும் வருத்தத்துடன் விஷயத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.அமிதாப்புக்கும் முதுகு வலியாம். அவருக்கும் உடம்புக்கு முடியலையாம். அவரை பார்த்துக் கொள்ள அவருடைய மனைவி ஜெயா பச்சன் அருகில் இல்லையாம். அவர் அமர்சிங் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதால் அவரை கவனித்துக்கொள்ள கடந்த ஒருமாதமாக அவருடன் இருக்கிறாராம். ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு உடம்பு சரியில்லை என்றதும் அமர்சிங் ஏகமாய் கவலையுடன் இருக்கிறாராம்.  மேற்கண்ட செய்தியில் ஐஸ்வர்யா ராய் பச்சனுடைய கணவர் பெயரை நானும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்தேன். ஒரு பத்திரிகையிலும் கண்ணில் படவில்லை. அது சரி. கவலைபடத்தான் நிறையபேர் இருக்கிறார்களே!

                                     

செய்தி 2
ஷாருக்கானை அமெரிக்காவில் இரண்டு மணிநேரத்திற்கு நிற்க வைத்து கேள்வி கேட்டார்களாம். மனிதர் தான் ஆசியநாட்டைச் சேர்ந்த முஸ்லிம் எனபதால் தான் இந்த அளவுக்கு மோசமான வரவேற்பு என்பது அவரது வாதம். இனிமேல் அமெரிக்க மண்ணை மிதிப்பதில்லை என்ற சபதம் வேறு. (என்னுடைய ரசிகர்கள் அழைத்தால் அமெரிக்கா செல்வது குறித்து யோசிப்பேன் எனறு ஒரு சப்பைக்கட்டு - அரசியல்வாதிகள் போல!) 
அமெரிக்க மண்ணில் ஷாருக்கானை கேள்விகேட்டு வாட்டிய அன்றே, உலகம் முழுவதும் தெரிந்த பாப் டைலான் எனற பாடகரையும் கேள்வி கேட்டுத் தொலைத்தெடுத்திருக்றார்கள். அவருடைய  ஐ.டி கார்டை கேட்டு குடைந்தி ருக்கிறார்கள். இத்தனைக்கு அவர் அமெரிக்க நாட்டவர் என்பது கூடுதல் செய்தி.  
இவ்வளவு ஏன்? மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான். எப். கென்னடியின் சகோதரர் செனட்டராக இருந்த போதிலும் விமானம் ஏறவிடாமல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர் பெயரில் இருந்த கென்னடி என்ற பெயரில் ஒரு தீவிரவாதியின் புனைப்பெயர் இருந்தது தான் காரணம். அமெரிக்கர்களின் கெடுபிடியில் ஒபாமா மாட்டாமல் இருந்தால் சரி!


 செய்தி 3

நடிகை ஸ்னேகாவுக்கு குருந்தகவல் அனுப்பி தொந்தரவு கொடுத்த்தாக ஒரு பெங்களுர் தொழிலதிபரை கைது செய்திருக்கிறார்கள். நடிகை ஸ்னேகா தன்னுடைய செல்போனின் எண்களை மாற்றியபோதும் அதுகுறித்து தெரிந்துக்கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்தாராம். போதாதகுறைக்கு நடிகை ஸ்னேகாவின் தந்தைக்கு வேறு போன் செய்து பெண் கேட்டாராம். நடிகை போலீஸில் புகார் கொடுக்க தொழிலதிபரை புழலில் வைத்து விட்டார்கள். தொலைக்காட்சியில் அவரை கைது செய்து போன காட்சியை காட்டும்போது தன் முகத்தை ஒரு கடிதம் போலிருந்த பேப்பரில் மறைத்துக் கொண்டார். ஒரு வேலை நடிகைக்கு எழுதிய காதல் கடிதமா என்பது தெரியவில்லை.

 செய்தி 4

எம்ஜியார் நினைவிடத்திற்கு வெடிகுண்டு வைத்த்தாக ஒருவர புரளி செய்து அதுவும் அவசரபோலீஸ் 100 க்கு போன் செய்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர ஆம்பூரை சேரந்தவராம். அடிக்கடி சென்னை வருவாராம். அவ்வாறு அவர் சென்னை வந்த சுபதினத்தில், அவரது செல்போனில் பேலண்ஸ் இல்லாததால் யாருக்கும் போன் செய்ய இயலவில்லையாம். எமர்ஜென்ஸி கால்கள் மட்டும்செய்ய முடிந்த்ததாம். அவருக்கு மிகவும் போர் அடிக்கவே போலீஸ் எமெர்ஜென்ஸிக்கு போன்செய்து வெடிகுண்டு புரளி செய்தாராம். ஆம்பூர் அண்ணனுக்கு சென்னை போலீஸ் பற்றித் தெரியாது போலிருக்கிற்து. அவரை கோழி அமுக்குவது போல அமுக்கி புழலுக்கு அனுப்பிவிட்டார்கள். இனிமேல் அவருக்கு கண்டிப்பாக போர் அடிக்காது!






Thursday, August 13, 2009

எனக்குத் தெரிந்த பாலகுமரன்

பாலகுமரன் எப்போது எழுதத்தொடங்கினார் என்பது எனக்குத் தெரியாது. நான் படித்த பாலகுமரனது முதல் கதை 1977 ஆண்டு மாலைமதியில், இரண்டாம் வெளியீட்டில் மகரிஷி எழுதிய “புவனா ஒரு கேள்விக்குறி“ (பின்னர் வெற்றிகரமான திரைப்படமானது. சிவக்குமார் அயோக்கிய ஹீரோவாகவும் ரஜனிகாந்த் அற்புதமான குணசித்திர வேடத்திலும் நடித்திருப்பார்கள்) கடைசிபக்கங்களில் ”ப்ளீஸ் பாலா” என்ற சிறுகதை வெளியாகி இருந்தது. மிகவும் அற்புதமான நடை. அதன்பிறகு பாலகுமரனது சிறுகதைகளை மட்டும் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். (எனக்கு ஏனோ பாலகுமரனது சிறுகதைகளில் இருந்த ஆழம் தொடர்கதைகளிலோ நாவல்களிலோ இல்லை என்றே இன்றும் படுகிறது.) அந்த காலத்தில் சாவி அவர்கள் பாலகுமரனுக்கு ”ஏதோ ஒரு நதியில்” என்ற தலைப்பிலும் சுப்ரமணியராஜுவுக்கு (இவர் இளம் வயதில் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் காலமானார்) ”எங்கோ ஒரு இரவில்” என்றும் தலைப்புக் கொடுத்து ஒரு மாத இதழில் வெளியிட்டார். இந்த “ஏதோ ஒரு நதியில்“ இருக்கிறது பாருங்கள் நான் இன்று வரையில் ஸ்லாகிக்கும் ஒரு அற்புதமான கதை. இ்ந்த கதையை படிக்கக்கூடாது. அனுபவிக்க வேண்டும்! பிறகு மெல்ல மெல்ல “யாதுமாகி நின்றாள்” “மெர்க்குரிப்பூக்கள்“ என்று பல கதைகள். நான் சிலவருட காலமாக பாலகுமரனது கதைகளை படிப்பதில்லை. எனக்குத் தெரிந்த பாலகுமரன் வேறு. இப்போது இருக்கும் பாலகுமரன் வேறு. அதை விடுங்கள். மீண்டும் எழுபதின் கடைசி ஆண்டுகளில் பாலகுமரன் எழுதிய கவிதைகள் இருக்கிறதே அவை ஒரு சுகானுபவம். எழுபதின் கடைசியிலும் என்பதின் ஆரம்பத்திலும் மாலன் அவர்கள் “திசைகள்” என்றொரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். (திரு சாவி அப்போது ஏகப்பட்ட பத்திரிக்கைகள் நடத்தி வந்தார். அவற்றில் திசைகளும் ஒன்று.) “திசைகள்“ குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது. (அந்த காலத்தில் ஆங்கிலத்தில் Youth Times என்றொரு பத்திரிக்கை இதுபோல வெளிவந்துக்கொண்டிருந்தது. அதனுடைய பாதிப்பாக இருக்கலாம்). அதில் மாலனும் பாலகுமரனும் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைகள் எழுதினர். ”வீடென்று எதைச்சொல்வீர்… அதுவல்ல எனது வீடு…“ என்ற மாலனது கவிதைகள் அற்புதமானவை. (வைரமுத்து கூட ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம். “அது ஒரு காலம் கண்ணே கனாக்காலம்” என்று தொடங்கும் அந்த கவிதை என்னுடைய ஞாபகப்பெட்டகத்தில் இருந்து எடுத்து பின்னொரு காலத்தில் தருகிறேன். அந்தக்கால வைரமுத்து நிஜமாகவே ஒரு வைரப் பெட்டகம்!) குறிப்பாக பாலகுமரனது இரண்டு கவிதைகள் எனக்கு இன்னமும் மறக்காமலிருக்கிறது.

உனக்கென்ன கோவில் குளம்

சாமிபூதம் ஆயிரம் ஆயிரம்

வலப்பக்க கடல் மண்ணை

இடப்பக்கம் இரைத்திரைத்து

நகக்கணுக்கள் வலிக்கின்றன

அடியே, நாளைக்கேணும் தவறாமல் வா!”

கடற்கரையில் காத்திருந்த காதலனை, வேறு எப்படியும் சொல்ல முடியாது. இந்தகால பாஷையில் சொல்லவேண்டுமென்றால் “சான்ஸே இல்லை!”

இதே போல மற்றொரு கவிதை. அட்டைபடத்தில் வந்திருந்தது என்று நினைக்கிறேன். சுகாசினி படம் போட்டிருந்தாக நினைவு.

‘பறித்து எறிந்தவைக் கொஞ்சம்

உருவி அறுத்தவைக் கொஞ்சம்

புரண்டு படுக்கையில்

நசுங்கி மடிந்தவைக் கொஞ்சம்

பதறி தவிக்கையில்

வேறுடன் போனவை ஆயிரம்…

நீயின்றி தளர்ந்த நாளில்

இப்புற்களின் மேலே அமர்ந்து

மொத்தமும் மீண்டும் நினைக்க

மனசுக்குள் சோகம் வளரும்

புற்களாய்… புதராய்… காடாய்…’

ஹும்எனக்குத் தெரிந்த பாலகுமரன் வேறு. அது அந்தக் காலம்!

Sunday, August 09, 2009

மீண்டும் மீண்டும் நான்...

ஏறத்தாழ நான் வலைப்பூத் தொடுத்து ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நான் எழுதாததில் தமிழுக்கும் தமிழ் கற்ற சான்றோருக்கும் ஏதும் வருத்தமோ இழப்போ இல்லை என்பது மனதுக்கு (வருத்தம் அளித்தாலும்) இதமாக இருக்கிறது. இதைவிட தமிழ்மணமோ, சக வலைப்பதிவாளர்களோ யாரும் கிஞ்ஞித்தும் மாறாமல் இருப்பது ஆறுதலை அளிக்கிறது. நான் மீண்டும் எழுதவேண்டும் என்று யாரேனும் உண்ணாவிரதமோ, போராட்டமோ செய்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்ததில், எல்லோரும் “விட்டது கருப்பு“ என்று சந்தோஷமாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை விடக்கூடாது. ஆக மொத்தம் என்னுடைய வலைப்பூவினை மீண்டும் தொடுக்க நான் வந்துவிட்டேன் என்பதனை கூறி எல்லோரையும் மிரளவைப்பதை தவிற வேறு வழியில்லை.

நான் எழுதுவில்லையே தவிற, வலைப்பூக்களை படித்துக் கொண்டிருந்தேன். அவ்வபோது பின்னூட்டமும் இட்டுக்கொண்டு தான் இருந்தேன். வியாபாரிகளான வலைப்பதிவாளர்களையும், வாள்பிடிக்காத குறையாக சண்டையிட்டவா்களையும் கண்டு கலங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

என்னைப்பொருத்தவரையில் விலைபேசாதவரையில் தான் கலை.

என்னுடைய இந்த அபிப்பிராயத்திற்காக சம்பந்தப்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக!. (மன்னிக்காவிட்டாலும் ஏதும் ஆகிவிடப்போவதில்லை!)

அதே நேரத்தில் புதிதாக முளைத்த வலைப்பூக்களும் அதன் வாசமும் நெஞ்சை கொள்ளைக் கொண்டதையும் கொள்வதையும் சொல்லாமல் இருக்க முடியாது. பழையன கழிதலும்…புதியன புகுதலும் தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ்மணத்துக்கும் புதிதல்லவே!

எது எப்படியோ. நானும் என்னால் முடிந்த அளவு தமிழையும் தமிழ்மணத்தையும் கலங்கடிக்க வந்துவிட்டேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

(எங்கப்பா எல்லோரும் தலைதெறிக்க ஓடுராங்க…?)