Monday, May 01, 2006

வேலை - சிறுகதை

“சந்துரு, கொஞ்சம் கடைக்குப் போய் வா” அம்மா சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள். நான் – சந்துரு, வேலையில்லா பொறியியல் பட்டதாரி - தினமும் இப்படி நூறுமுறை கடைக்கும், ரேஷனுக்கும், மாவுமில்லுக்கும் அலைந்துக் கொண்டிருக்கிறேன். கூடவே, தினப்படி, walk-in interview, spot selection interview போல இன்னபிற நேர்முகத் தேர்வுகளுக்கும் எழுத்து தேர்வுகளுக்குமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

“சந்துரு, இன்னுமா நோக்கு வேலை கிடைக்கலை? உங்கப்பா சொன்னாறே, நீ First Class Graduate-னு. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. நீ இன்னும் சிரத்தையா வேலைத் தேடணும். நான் உங்கப்பா எல்லாம் SSLC முடிச்சதும் TVS-ல கதறிட்டு எங்களுக்கு வேலை குடுத்தான் தெரியுமா?” என்றார் அப்பாவுடன் சேர்ந்து வேலைப்பபார்த்து சேர்ந்து ரிடையர் ஆன ஈஸ்வரைய்யர் ஒருநாள்.

“அது தெரியாது மாமா. வேலை குடுத்துட்டு கதறினான். அதுதான் எனக்குத் தெரியும்” என்றேன் எரிச்சலில்.

“இதுதான்... இந்த வாய்க்குத்தான் நோக்கு வேலை கிட்டமாட்டன்றது. ரொம்ப கஷ்டம்” என்று முணுமுணுத்துக்கொண்டே அவர் போய்விட்டார்.

ஈஸ்வரைய்யராவது பரவாயில்லை. இந்த அப்துல் கரீம் சாயபு இருக்காறே அவர் என்றால் தான் ரொம்ப பயம். அப்பாவுடன் ஐந்தாவது வரைக்கும் படித்துவிட்டு கடைத்தெருவில் ஒரு செருப்புக்கடை வைத்திருக்கிறார். “சந்துரு பேட்டா... என்னா நீ எப்போ பாத்தாலும் ஊர் சுத்து. உங்க வாப்பா கிட்ட சொல்லி என் ஷு கடையில் வேலை போட்டு தரேன். டெய்லி பேட்டா தரேன். என்னா சொல்றே?” என்பார் ஸ்பஷ்டமாக. அவர் டெய்லி பேட்டா தருவாரோ அல்லது காலில் இருக்கும் Bata-வால் தருவாரோ... அதனாலேயே அவரை தெருக்கோடியில் பார்த்தாலே அவர் கண்ணுக்குப் படாமல் வேறே சந்துக்கு திரும்பி விடுவேன்.

‘ஐயா, நான் என்ன வேலை செய்யமாட்டேன் என்றா சொல்கிறேன்? ஆனால் ஏதாவது ஒரு வேலைப்பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்ள தயாரில்லை. கிடைக்கும் எனக்கும் ஒரு வேலை... எனக்குப் பிடித்த வேலை. அப்போது வைத்துக் கொள்கிறேன் உங்களையெல்லாம்...’

“எண்டா சந்துரு, கொஞ்சம் செட்டியார் கடைக்குப் போய் வாயேன்டா” என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் என் அம்மா.

சற்றுமுன்னர் தான் மாவுமில்லுக்குப் போய் வந்திருந்தேன். மீண்டும் கடைக்குப் போக எரிச்சலாக இருந்தது. “ஏம்மா, ரமேஷை அனுப்பேம்மா” என்றேன் படிப்பது போல பாவலா காட்டிக்கொண்டிருந்த என் தப்பியை பார்த்துக் கொண்டு. அவன் +1 படிக்கிறான். இப்போது study holidays. “டேய். உன்கிட்ட சொன்னா நீ செய். அவனுக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு. நீ சும்மாதானே இருக்க!”

இன்னமும் அம்மா வாயில் விழுந்து எழுந்திரிக்க திராணியில்லாமல் “சரி, சரி குடும்மா” என்று பையையும் பணத்தையும் அம்மா எழுதிவைத்திருந்த பெரிய லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது தம்பி நமுட்டு சிரிப்பு சிரித்தது வேறு எரிச்சலைக் கிளப்பியது.

வழியில் ப்ரதிமா. பெயருக்கேற்றது போல பொம்மை மாதிரி இருப்பாள். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள் போலும். சற்று பின்னிய அவளுடைய நடை அதை உணர்த்தியது.

“எங்கே” என்றேன்.
“college… Hall ticket” என்றாள் தந்தி பாஷையில். எப்போதும் வாயாடும் அவளின் தந்தி பாஷைக்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், பின்னால் அவள் அப்பா.

“என்னடா சந்துரு, எப்போ வேலைக்குப் போறதா உத்தேசம்?” என்றார் அவள் அப்பா.
“சீக்கிரம் போவேன், மாமா” என்றான் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு... மாமாவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.
“என்னவோ போ! ஏதோ வேலையை தேடிண்டோமோ, அப்பனுக்கு பாரத்தை கொரைச்சோம்மோன்னு இல்லாம... இந்த காலத்ததுப் பசங்க” என்று முணுமுணுத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த நாட்டில் வேலையில்லா இளைஞனுக்குத்தான் எத்தனையெத்தனை தொல்லைகள்.

செட்டியார் கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லாவில் calculator- ஐ காட்டிலும் அதி வேகமாக கணக்குப் போட்டுக் கொணடிருந்த போதிலும், செட்டியார் என்னைப் பார்த்து, “சந்துரு தம்பி, லிஸ்ட்டை கொடுத்துட்டுப் போங்க மதியம் அனுப்பி வைக்கிறேன்” என்று பையையும், லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டார்.

செட்டியார் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு போகலாமா அல்லது லைப்ரரிக்குப் போகலாமா என்று யோசித்தக்கொண்டு நடந்தபோது சற்றுத் தொலைவில் போஸ்ட்மேன் கந்தசாமி வருவது தெரிந்தது. இப்போதெல்லாம் என்னுடைய ஒரே ஆறுதல். நம்பிக்கை எல்லாம் அவர்தான்.

“கந்தசாமி அண்ணே, எனக்கு ஏதாச்சும் லெட்டர்...” என்று இழுத்தேன்.
“யாரு? சந்துரு தம்பியா?” கந்தசாமிக்கு கொஞ்சம் வெள்ளெழுத்து. அவர் ரிடையர் ஆகும் முந்தையமாதம் தான் கவர்மெண்ட்டில் ரிடையர் வயதை அறுபது ஆக்கிவிட்டார்கள். இன்னமும் ஆறுமாதம் இருக்கின்றதாம் அவருக்கு அறுபது வயதாக. என்னிடம் அடிக்கடி “தம்பி, ரிடையர் வயசு அறுபத்தைஞ்சு ஆக்கப் போறாங்களாமே நிஜமா?” என்று கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு கல்யாண வயசில் ஒரு பெண் இருப்பதாக கேள்வி!

“ஒரு லெட்டர் இருக்கு தம்பி” என்று தன் கையில் வைத்திருந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்தார். கவரைப் பார்த்ததும் என்நெஞ்சு சற்று படபடத்தது. கடந்த மாதம் நான் interview attend செய்த L&T நிறுவனத்திலிருந்து வந்திருந்தது. கடவுளை நேர்ந்துக் கொண்டு கவரைப் பிரித்தேன். மனசெல்லாம் பரபரக்க அங்கேயே கடிதத்தைப் படித்தேன்.

‘Congratulations…’ என்று ஆரம்பித்த கடிதம் எப்போது நான் வேலையில் சேர்ந்துக் கொள்ள இயலும் என்பதை தெரிவிக்கக்கோரி முடிந்திருந்தது... என்னுடைய சந்தோஷத்தில் போஸ்ட்மேன் கந்தசாமியை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் போலிருந்தது. அதிவேகமாக அவர் கையைப் பிடித்து குலுக்கினேன். “ரொம்ப தேங்ஸ்ண்ணே” என்றேன்.

“என்ன தம்பி, நல்ல விஷயமா?”

“ஆமாண்ணே, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு!” அம்மா கடைக்கு கொடுத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை அவருக்கு தாராளமாகப் பரிசளித்தேன்.

வீட்டை நோக்கி சென்றபோது, சென்னை நகரின் உச்சிவெயில் மிகவும் இரம்யமாக இருப்பதாகப் பட்டது. பஜாரில் கூட்டமாக இருந்தபோதிலும் எனக்கு எல்லோரும் வழிவிட்டது போலிருந்தது. என்னை நோக்கி அனைவரும் புன்னகைத்தனர். காலடியில் மார்க்கெட் சகதி பூக்களாக மாறிப் போனது. ஒற்றை காக்கை இனிமையாக கரைந்துக் கொண்டு பறந்தது. கறிக்கடை பாய் எறிந்த எலும்புக்காக இரண்டு நாய்கள் ‘அன்புடன்’ சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வேகமாக சைக்கிளில் மோத வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா கஸ்மாலம், வூட்ல சொல்லிகினு வந்திட்டியா” என்று ஒரு பெண்மணி ‘அக்கரையுடன்’ விசாரித்தாள். திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.

ஓட்டமும் நடையுமாக நான் வீட்டை அடைந்தபோது, அப்பாவுடன் ஈஸ்வரைய்யரும் அப்துல கரீம் சாயபுவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். காலனி விஷயமாக இருக்கும் போலும்.

“அப்பா, எனக்கு வேலைகிடைச்சாச்சிப்பா” என்று L&T நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தைக் கொடுத்தேன். அப்பாவின் முகம் அதுபோல மலர்ந்து நான் பார்த்ததில்லை. கடிதத்தைக் படித்துவிட்டு “very good” என்று என் கையை பிடித்துக் குலுக்கினார். “சந்துருவுக்கு L&T-ல Engineer வேலை கிடைச்சிருக்கு” என்று மற்ற இருவருக்கும் தெரிவித்தார்.

“நேக்கு எப்பவோ தெரியும். சந்துருவுக்கு பெரிய வேலை கிடைக்கும்னு. அவன்தான் first class graduate ஆச்சே!” என்றார் ஈஸ்வரைய்யர்.

“சந்துரு பேட்டா நல்ல புள்ள ஆச்சே. மத்த புள்ளைங்க மாதிரி அங்க இங்க போவாது. அது உண்டு அது படிப்பு உண்டுன்னு இருக்கும். அதுபடிப்புக்கு இன்னும் பெரிய இடத்துக்குப் போகும் பாருங்கோ” என்றார் அப்துல கரீம் சாயபு.
இருவா பேசியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

“சந்துரு, முதல்ல அம்மாகிட்டச் சொல்லுடா. ரொம்ப சந்தோஷப்படுவாள்” என்றார் அப்பா.

“அம்மா, எனக்கு L&T ல Engineer வேலை கிடைச்சிருக்கும்மா” என்றேன் சமையலறையில் வேலையாக இருந்த அம்மாவிடம். அம்மா அப்படியே பூரித்துப் போனாள். மாவு கையோடேயே எனக்கு திருஷ்டி கழித்தாள்.

“டேய் சந்துரு, எனக்கு சந்தோஷத்துல தலைக்கால் புரியலேடா” என்று பதட்டப்பட்டாள். “ஏதாவது ஸ்வீட் பண்ணனுமே, செட்டியார் எப்படா மளிகை சாமான் அனுப்பறதா சொன்னார்?”
“மதியம் அனுப்பறேன்னாருமா”
“அடடா, சர்க்கரை வேற தீர்ந்து போச்சே” என்றவள், “டேய் ரமேஷ், சீக்கிரம் செட்டியார் கடைக்குப் போய் சர்க்கரையை மட்டும் சீக்கிரம் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டுவாடா” படித்துக் கொண்டிருந்த என் தம்பியிடம்.

“அவனை ஏம்மா டிஸ்டர்ப் பண்ற. நான் போயிட்டு வரேன்மா. அவன் படிக்கட்டும். நான் சும்மாதானே இருக்கேன்” என்றேன்.

“அவன் படிச்சு கிழிச்சான். நீயெல்லாம் இனிமேல் கடைக்கெல்லாம் போகக்கூடாது. அவனே போகட்டும்” என்றாள் அம்மா.

ஏரிச்சலுடன் கடைக்குக் கிளம்பிய என் தம்பியை அனுதாபத்துடன் பார்த்தேன்.

***

1 comment:

Anonymous said...

அற்புதமான கதை. நகைச்சுவை இழையோட அருமையாக பின்னியிருந்தீர்கள். உங்களுடைய மற்றைய கதைகளையும் படித்தேன். ஒவ்வொரு கதைக்கும் உங்களால் எப்படி வித்தியாசம் காட்டமுடிகிறது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

அன்புடன்
கிஷோர் குமார்
லண்டன்