Saturday, September 06, 2008

எங்கு போய் முட்டிக்கொள்வது?








விநாயகர் சதுர்த்தி வந்தாலே பயமாக இருக்கிறது.  நம்முடைய முழு முதல் கடவுள்.  ஓம்கார வடிவானவர். சித்திக்கும் புத்திக்கும் நாயகன். பிடித்து வைத்தாலே போதும் என்ற அளவில் எளிமையானவர். அரசமரத்தடியில் அமர்ந்துக்கொண்டு, வேண்டுவோருக்கு அருள காத்திருப்பவர்.

“கணானாம்த்வா கணபதிம் ஹவாமகே” என்று வேதம் கணபதியை போற்றுகிறது! சைவத்தில் சிவபெருமானுக்கே தடைகளை நீக்கி அருளியவர் அவர் என்று புராணம் சொல்கிறது. வைணவத்தில் கஜானனர் என்ற நாமத்துடன் மஹாவிஷ்ணுவின் சேனை முதலியாக இருப்பவர். இவ்வளவு ஏன், ஹிந்து மதத்துக்கு மாற்றானது என்று  சொல்லப்பட்ட பௌத்த - ஜைன மதங்களில் கூட விநாயகர் உண்டு. ஸ்ரீலங்கா எடுத்து செல்லவிருந்த ரங்கநாதரை விபீஷனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பண்ணிவிட்டு மலையுச்சில் போய் அமர்ந்தவர். அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை காக்கையாய் வந்து விடுவித்தவர் அவர். அத்தகைய விநாயகருக்கு இன்னமும் சில நாட்களில் கொடுமை நடக்க இருக்கிறது.  அத்தனை ஆத்திகர்களும் நாத்திகர்களை விட கேவலமாக நடக்கப் போகிறார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் சாதாரணமாக புழங்கும் தேவையற்ற வார்த்தைகளுக்கெல்லாம் சண்டை பிடிப்பவர்கள், அறிக்கை விடுபவர்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அரசியல் வாதிகளின் சிலைகளை அங்கஹீனம் செய்யப்படும்போதெல்லாம் கொதிக்கும் மக்கள் இதற்கென்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இந்துக்களை காப்பதற்காகவே முன்னணியில் இருப்பவர்களிடம் இந்த கொடுமைகளுக்கு ஏதும் பதில் உண்டா?

இராமாயணத்தில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. 

இராமர் ஒருமுறை சந்தியாவந்தனம் செய்வதற்காக ஒரு ஆற்றங்கரையில் தன்னுடைய வில்அம்பை மணலில் நட்டுவிட்டு ஆற்றில் இறங்கி கைகால்களை சுத்தம் செய்ய சென்றாராம். திரும்பி வந்து அம்பை மணலி்ல் இருந்து எடுத்துப் பார்த்தால் அந்த அம்பில் ஒரு தேரை குத்துப்பட்டு இருந்ததாம்.  அப்போது இராமர் அந்த தேரையை பார்த்துக் கண் கலங்கிக் கேட்டாராம், “நான் அம்பை குத்தபோகும்போது நீ சத்தமிட்டுஇருந்தால் இந்த குற்றம் நேர்ந்திராது அல்லவா?” அதற்கு அந்த தேரை,”எனக்கு யாரும் தீங்கிழைக்க முற்பட்டால் ஸ்ரீராமா என்று உன்நாமத்தை விளிப்பேன். ஆனால் ஸ்ரீராமனே இவ்வாறு செய்யும்போது நான் யாரை அழைப்பேன்?” என்றதாம்.

அது போல இருக்கிறது.  மாற்றுமதத்தவர் ஏதேனும் தீங்கிழைத்தால் நாம் பொங்கி எழலாம்.  செய்வதெல்லாம் சார்ந்த மதத்தினரே என்னும்போது எங்கு போய் முட்டிக்கொள்வது?

11 comments:

கோவி.கண்ணன் said...

சென்ற ஆண்டு இந்த படத்தைப் போட்டு கேள்வி எழுப்பினேன்
இது தவறு அல்ல, களிமண்ணில் பிள்ளையாரை செய்து கரைப்பது தானே வழக்கம் என்றார்கள்

ஒரு சிறுவனை சிதைந்த அந்த சிலைகள் மீது நின்று கொண்டு சிறுநீர் கழிக்கச் சொன்னால் ஒப்புக் கொள்வார்களா என்பதே என் கேள்வி.

SurveySan said...

//செய்வதெல்லாம் சார்ந்த மதத்தினரே என்னும்போது எங்கு போய் முட்டிக்கொள்வது?//

இதுல ஏதும் உள்குத்து இல்லியே? எனக்கும் இந்த கேள்வி சில நாளா இருக்கு ;)

ஆனா, பேப்பர் விநாயகனை கடலில் தள்ளுவது குறைய வேண்டும் என்பது ஏற்கப்படவேண்டிய கருத்து. (அதான சொல்ல வரீங்க?)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

கரீக்க்ட்டா சொன்னிங்கண்ணா,

இனியாவது சிந்திப்பார்களா?

Unknown said...

மிக நல்ல பதிவு.

வாழ்த்துக்கள்.

இப்போதெல்லாம், மதம் பிடித்தவர்கள் கொண்டாடுவதுதான் மதவிழாவாக உள்ளது. ஒரு தடவையாவது விநாயாகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடந்துள்ளதா? தயவுசெய்து, மாற்று மதத்தவன், நம்மிடம் குறை சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம், இந்த வருடம் கூட பிரச்சனை.

மதத்தை அரசியல்வாதியிடம் விட்டால் என்ன ஆகும் என்பதற்கு நம்முடைய விழாக்கலே சாட்சி.

எனக்கு ஒரு கேள்வி,

விநாயாகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான காரணம் யாரவது சொல்கிறீர்களா? தப்பாக நினைக்க வேண்டாம், தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.

Anonymous said...

//ஒரு சிறுவனை சிதைந்த அந்த சிலைகள் மீது நின்று கொண்டு சிறுநீர் கழிக்கச் சொன்னால் ஒப்புக் கொள்வார்களா என்பதே என் கேள்வி.//

இந்த முகமது பின் துக்ளக்-ன்னு அந்த காலத்து சோ படம் ஒண்ணு உண்டு. அதுல, கடைசி காட்சியில, துக்ளக், சும்மா நின்னிட்டிருக்குற மக்களைப் பாத்து, "அய்யய்யோ! நீங்கள் எல்லாரும் சேர்ந்து பதூதாவைக் அடித்து விடுவீர்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது"ம்பாரு. கூட்டம் உடனே, பதூதாவை அடிக்க ஆரம்பிக்கும். துக்ளக், மேலும், "ஐயோ! நீங்கள் பதூதாவைக் கல்லால் அடித்தே கொன்று விடுவீர்கள் போலிருக்கிறதே!" என்பார். உடனே, மக்களும், கல்லெடுப்பார்கள்.

இதே போல, "நாட்டைத் திருடாதே"வோ இல்ல "காவல் பூனைகள்" படமோ, சரியா நினைவில்ல, அதுல நிழல்கள் ரவி ஒரு அரசியல்வாதி. "என்னுடைய தொண்டர்கள் யாரும் எனக்காகத் தீக்குளிக்க வேண்டாம்" என்று போலித்தனமாய் மைக்கில் அறைகூவல் விடுவார். உடனே, அவரது கைத்தடிகள் அவரது கட்டளையைப் புரிந்து கொண்டு, இளிச்சவாயன் ஒருத்தனைப் பிடித்துத் தீ வெச்சிடுவாங்க. உடனே அவரும், "அய்யய்யோ! சொல்லிக்கிட்டே இருந்தேனே! சொல்லச் சொல்லக் கேக்காம, என் தொண்டர்கள் என் மேலுள்ள அன்பால் இப்புடி செய்யிறாங்களே"ன்னு பொய்யா வேதனப் படுவாரு.

இதெல்லாம் "subliminal suggestion" அப்புடீங்குற வகையைச் சேர்ந்தது. மக்கள் அறியாமலே (சில நேரங்களில், அறிந்தும்) அவங்க மனசுல நமக்குத் தேவையான எண்ணங்களை விதைக்குறது! அடுத்த முறை, பிள்ளையாரைப் பார்ப்பவர்களுக்கு, மனதில், அதன் கூடவே, சிறுவன் ஒண்ணுக்கடிக்கும் பிம்பமும் சேர்ந்தே வரும். இந்த பிம்பம் சமுதாயத்தில் பரவப் பரவ அந்த எண்ணத் துகள் ("meme" என்று சொல்வார்கள்) வலுவடையும்; என்றோ ஒரு நாள், அதை ஒருவன் செய்யவும் செய்வான்.

நம்ம கோவி. கண்ணன் செஞ்சிட்டு வர்றது இது மாதிரி வேலை தான். தொடர்ந்து, அவருடைய பதிவுகள், பின்னூட்டங்கள் எல்லாத்தையும் பார்த்தால் இந்த இழை தெளிவாகப் புலப்படும். தொடர்ச்சியாக, "புள்ளையார் மேல சிறுவன் ஏறி நின்னு ஒண்ணுக்கடிச்சிரப் போறானே" என்று தன் பதிவிலும், மற்றவர் பதிவில் பின்னூட்டமாகவும் இவர் நெஞ்சம் பதைபதைப்பது "ஆடு நனையுதே ஆடு நனையுதே"ன்னு தான் எதிரொலிக்குது!

மிகவும் ஆபத்தான போக்கு இது! வேற என்னத்தச் சொல்ல! ஹூம்! தூங்குறவங்க முழிச்சிக்கங்கப்பா! :(

-கரை ஏறிட்டவங்கள்ல ஒருத்தேன்.

Tech Shankar said...

அதானே "எங்கு போய் முட்டிக்கொள்வது?"

சந்தர் said...

//ஒரு சிறுவனை சிதைந்த அந்த சிலைகள் மீது நின்று கொண்டு சிறுநீர் கழிக்கச் சொன்னால் ஒப்புக் கொள்வார்களா என்பதே என் கேள்வி.//
நடக்கிற அநியாயம் போதாதா..இது வேறயா?

சந்தர் said...

//ஆனா, பேப்பர் விநாயகனை கடலில் தள்ளுவது குறைய வேண்டும் என்பது ஏற்கப்படவேண்டிய கருத்து. (அதான சொல்ல வரீங்க?)//
ஏன் பேப்பரு விநாயகனை கடலில் தள்ளவேண்டும்? களிமண் பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்தால் போதாதா? விநாயகர் ஊர்வலத்தில் பக்தி எத்தனை சதவீதம் என்பதுதான் என் கேள்வி.

சந்தர் said...

// இனியாவது சிந்திப்பார்களா? //

சிந்திக்கவேண்டும் என்பது என் அவா. இல்லாவிடில் வேறு யாராவது இதே போன்ற பதிவை அடுத்த ஆண்டு இடக்கூடும். வேதனை தொடரும்...

சந்தர் said...

//மாற்று மதத்தவன், நம்மிடம் குறை சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்//
நம்மிடம் உள்ள பிரச்சனையே இதுதான். வேற்று மதத்தவன் மாற்று மதத்தவன் என்று விலகி போவதால் தான். தவறு யார் செய்தாலும் சொல்வதில் தவறில்லை.

சந்தர் said...

//நம்ம கோவி. கண்ணன் செஞ்சிட்டு வர்றது இது மாதிரி வேலை தான். தொடர்ந்து, அவருடைய பதிவுகள், பின்னூட்டங்கள் எல்லாத்தையும் பார்த்தால் இந்த இழை தெளிவாகப் புலப்படும். தொடர்ச்சியாக, "புள்ளையார் மேல சிறுவன் ஏறி நின்னு ஒண்ணுக்கடிச்சிரப் போறானே" என்று தன் பதிவிலும், மற்றவர் பதிவில் பின்னூட்டமாகவும் இவர் நெஞ்சம் பதைபதைப்பது "ஆடு நனையுதே ஆடு நனையுதே"ன்னு தான் எதிரொலிக்குது!//
திரு அனானி நான் அவ்வாறு நினைக்கவில்லை. சிதைந்த சிலைக்காணும் எவறும் நெஞ்சம் பதைபதைப்பது இயல்புதான்.